Friday 3 May 2013

பசு தெய்வம்

                                  பசுமாடு புனிதம் என்று நான் நினைப்பதில்லை, ஆனால் அதன் மீது மிகுந்த மதிப்பு உண்டு, எந்தவித பலனும் பாராமல் நமக்கு பாலை தருவதால் சிலர் அதை தாய்க்கு ஈடாகப் போற்றுவதில் எனக்கு உடன்பாடு உண்டு, பால் சைவமா ? பால் கன்றுக்குத் தானே, அதையே நீங்க திருடி குடிக்கிறீர்கள் என்று கேட்பவர்களில் எவரும் மாட்டு இறைச்சியையோ, வேறு எந்த விலங்கின் இறைச்சியையோ உண்ணாதவர்கள் இல்லை, பசுவதைப் பற்றி விவாதங்கள் வரும் போது எதிர் தரப்பு 'பசும் பால்' பற்றிய கேள்வியை எழுப்பி பசுவிடம் பால் சுரப்பது கன்று குட்டிக்குத் தானே ? என்று கேட்பர். பசுக் கொலைகள் என்பதில் நான் புனிதத்துவத்தை முன்னிறுத்தி தடுக்க விரும்பியதில்லை, மாறாக அதன் மூலம் பெற்ற பாலிற்கான நன்றிக்கடன் என்ற அளவில் அவற்றை கொல்லாமல் விட்டால் என்ன என்றே கேட்பதுண்டு. பசுவைப் பொருத்த அளவில் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனால் வீட்டு விலங்காக வளர்க்கப்படுபவை, மற்ற வீட்டு விலங்குகளுக்கு இருப்பது போல் காம்புகளின் எண்ணிக்கையையும் மடியையும் ஒப்பிட, பசுவிடம் சுரக்கும் பால் அதன் இனவிருத்திக்கு மறைமுகமாக உதவுவதற்கு வளர்ப்பவர்களுக்கு இரண்டு காம்பு, கன்றுக்கு இரண்டு காம்பு என்றே அமைந்திருக்கும், பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு பல காம்புகள் அமைந்திருந்தாலும் அவை ஈனும் குட்டிகளுக்கு அவை சரியாகவே இருக்கும், தவிர அவற்றை பயன்படுத்தி மனிதனுக்கு பழக்கம் இல்லை, உபரியான பால் என்பதை உற்பத்தி செய்வதில் மாடும், அடுத்து ஆடும் உள்ளன, சிலர் ஆட்டின் பாலையும் விரும்பிக் குடிப்பார்கள், அவற்றை ஆடு இழப்பதால் குட்டிகளுக்கும் பெரிய இழப்பு இல்லை, காரணம் கன்று குட்டிகளைப் போல் அன்றி ஆட்டுக் குட்டிகள் பிறந்த அடுத்த நாளே புல்லை சுவைக்கக் கற்றுக் கொள்ளும்,என்பதால் ஆட்டின் பாலைக் கறப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர்.

                                 பசு இரண்டு கன்றுகள் போடுவது எப்போதாவது நடைபெறுவது தான், மரங்கள் தன் இனவிருத்திக்கு விதையை மூடியிருக்கும் பழத்தை இலவசமாகக் கொடுப்பது போல் பசுக்களின் பரிணாமத்தில் பால் உற்பத்தி என்பது கன்று அருந்தும் அளவை விட மிகுதியானது, குறிப்பாக மனிதர் உள்ளிட்ட விலங்கினங்கள் அனைத்திற்கும் பலவகையான சுரப்பிகள் உண்டு, குறிப்பிட்ட பருவகாலங்களில், சுரப்பிகள் தூண்டுதலில் வர உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் பொழுது அவை தொடர்ந்து வேலை செய்யும், பால், தேன், மனித உமிழ் நீர் மற்றும் அனைத்து சுரப்பிகளும் அதன் உற்பத்தியை செய்து கொண்டு தான் இருக்கும், எனவே  இரத்தம் தான் பாலாக மாறுகிறதா, தேனாக மாறுகிறதா என்பதவிட சுரப்பிகள் சுரப்பதற்கு  இரத்தம் எரிபொருளாக பங்காற்றுகிறது என்பதைத் தவிர்த்து, இரத்தம் தான் பாலாக மாறுகிறது எனவே சைவ விரும்பிகள் அதை குடிப்பது தவறு என்பதை நான் புறம் தள்ளுவேன், தீவிர பவுத்த சைவர்கள் இரத்தம் தான் பால் என்று கருத்தில் சோயா பாலைத்தான் குழந்தைகளுக்கும் கொடுத்து பழக்குகிறார்கள். நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடே என்றாலும் உடலில் அதன் மூலம் உற்பத்தி ஆவது இரத்தம் தான் என்பதால் இது குறித்த கருத்துகளை புறம் தள்ள முடியும். பசு மட்டுமல்ல காளையின் உடல் அமைப்பும் அதன் உறுதியான மேல் கழுத்தும் உழவு செய்வதற்கு அதனைப் பூட்டுவதற்ப உறுதியாகத்தான் இருக்கும். மனிதர்களுக்கு லாபம் தர அவைகளால் முடியவில்லை என்றால் அவற்றை வீட்டு விலங்குகளாக வளர்த்திருக்கவும் மாட்டார்கள்.


                                 மற்றபடி பசு தெய்வம், என்பதையோ புனிதம் என்பதையோ நான் ஏற்றுக் கொள்வதில்லை, பால் கொடுக்கும் உயிர்களில் தாய்க்கு அடுத்து பசு வருவதால் அதன் மீது மதிப்பு உண்டு, எங்கள் வீட்டில் ஒரே வேளையில் நான்கு பசுமாடுகள் வரை வளர்த்திருக்கிறோம், எங்க ஊரில் உடமையாக பசு வைத்திருக்து பால் கறந்து குடிப்பது ஒரு மதிப்பு என்று பெற்றோர்கள் நினைத்திருந்தார்கள், வீட்டுக்கு பயன்படுத்தியது போல் 'சாஸ்திரத்திற்கு' என்று கொஞ்சம் தண்ணீரை ஊற்றி மற்றவர்களுக்கு விற்பார்கள், கறந்த பாலை அப்படியே கொடுத்தால் நல்லது இல்லையாம், என்கிற முட நம்பிக்கையும் பெற்றோர்களுக்கு உண்டு, சென்ற முறை ஊருக்குச் சென்ற பொழுது மாடுகள் ஒன்றையும் காணும், ஏன் என்று கேட்க, அவற்றை பராமரிக்க முடியவில்லை என்று அம்மா சொன்னாங்க, அம்மாவுக்கு பசு மாடு லஷ்மி என்ற நம்பிக்கை உண்டு, மாடுகளுக்கு லஷ்மி, சரஸ்வதி என்றெல்லாம் பெயர் வைத்து அழைப்பார்கள். இன்றும் கூட வீட்டு வாசலில் சாணம் தெளிப்பதை வளக்கமாகத்தான் வைத்திருக்கிறார்கள், சாணக் கரைசல் ஒரு கிரிமி நாசினி என்றே சொல்லப்படுகிறது, பெரும்பாலும் களி மண் சுவர்களையும் தரையையும் கொண்ட குடிசை வீடுகளில் சாணம் கரைத்து மொழுகுதல் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது. அந்த காலத்தில் வீடுகளைச் சுற்றி புதர்கள் இருந்ததால் சாண வாசனை போகும் வரைத ஊர்வன மற்றும் பூச்சி வகைகள் வீட்டுக்குள் வராது என்பதற்காக மாதம் ஒருமுறையேனும் வீட்டை மொழுகுவது பெண்களின் வீட்டு வேலைகளில் ஒன்றாக இருந்தது. பசு மாடு லக்‌ஷிமி என்கிறீர்களே வளர்த்ததில் எதாவது ஒரு பசு மாட்டையாவது அவை வயதாகி சாகும் வரை வளர்த்திருக்கிறீர்களா ? நான்கு ஈற்றுகள் முடிந்த பிறகு வேறு எங்காவது இரண்டாம் ஈற்று என்று விற்றுவிடுவது தானே வழக்கம், வாங்கியவர்கள் அதை கேரளாவுக்கு தானே கொண்டு செல்வார்கள், என்று கேட்டதற்கு அம்மாவிடம் இருந்து வந்த பதில் 'அதோட தலையெழுத்து நாம என்ன செய்ய முடியும் ?' என்பதே, பசுமாடு வளர்ப்பவர்களின் அனைவரும் நிலைகளும் இது தான். இதைப் பார்க்கும் பொழுது பசுவின் மீது கட்டப்படும் புனிதத்தை அதனை நம்புவர்களே மீறிவிடுகிறார்கள் என்னும் போது மற்றவர்கள் பசுவை அடித்து திண்பதில் நாம் என்ன குறை சொல்ல முடியும் ?


                                 பசுக்களை அடிமாடுகளாக மாற்றுவது அதனை வளர்த்தவர்களின் செயலே அன்றி அதனை வாங்குபவர்களோ, வெட்டி திண்பவர்களோ கிடையாது, கைவிடப் பட்ட மாடுகள் தான் அடிமாடுகள் ஆகின்றன. எருமையும் தானே பால் கொடுக்கிறது, அதனை ஏன் புனிதமாகக் கருதாமல் எமனாகக் கருதுகிறார்கள், நம் மனதில் இருக்கும் கருப்பு பற்றிய தாழ்வு மனப்பான்மையும் அதனை இழிவு படுத்திப் பார்ப்பதில் வரும் மகிழ்ச்சியும் தான், தமிழர்களில் பெரும் விழுக்காட்டினர் கருப்பு நிறம் தான் என்பதால் தமிழர்களுக்கு எருமை மாடுகளை எமனாகக் காட்டுவதற்கு தகுதியே கிடையாது.

                                 அந்த காலத்து ஆட்கள் எல்லாவற்றையும் மதித்தார்கள், போற்றினார்கள் என்று பொத்தாம் பொதுவாக பலர் கூறுவதும், நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள், பசு புனிதம் என்று நம்பப்பட்ட காலங்களில் சிறுநகரங்களிலும், சிற்றூர்களிலும் (கிராமம்) ஊருக்கு ஒன்றாவது கால்நடை பட்டி உண்டு, இந்தப் பட்டிகள் பெரும்பாலும் ஆடுமாடுகளை அடைத்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும், அடுத்தவர் வயலில் இறங்கி மேயும் போது அவை பிடிபட்டால் பட்டியில் ஒப்படைக்கப்படும், பட்டி நடைமுறைகள் ஆடுமாடுகளுக்கு உடைமையானவர்கள் அவற்றிற்கு நஷ்ட ஈடு தலையாரி யிடம் கொடுத்து அவற்றை விடுவிக்க வேண்டும், விடுவிக்கும் வரை பட்டியில் அடைக்கப் பட்ட ஆடுமாடுகள் பட்டினிதான், அப்படி பட்டினி போட்டு அடைத்து வைத்திருப்பது 10 நாட்கள் வரை தொடரும், அதற்குள் உடல் வற்றி வெறும் எலும்பும் தோலுமாக ஆக அவற்றை ஏலம் விடுவார்கள், ஏலம் எடுப்பவர்கள் ரூ 20 க்கும் 30க்கும் ஏலம் எடுத்துச் செல்வார்கள். பெரும்பாலும் வழி தவறி வந்த ஆடுமாடுகள் தான் மீட்பவர் வரும் வரை பட்டினி கிடக்க நேரிடும். இது எவ்வளவு கொடுமை பாருங்க, தான் செய்தது தவறே என்று அறியாத விலங்கினங்களை எப்படியெல்லாம் கொடுமைபடுத்தி இருக்கிறார்கள். அவ்வாறு அடைக்கப் படும் ஆடுமாடுகளில் ஈனும் நிலையில் உள்ளவைகளும் கூட உண்டு, எங்கள் வீட்டு மாடு ஒரு முறை பின் தொடையில் ஆழமான பேனா கத்தி கீரலுடன் வந்து சேர்ந்தது, எங்கு சென்றது யார் கீறினார்கள் என்றே தெரியவில்லை, பேச இயலாத உயிர்களை முன்பு வாழ்ந்தவர்கள் எப்படியெல்லாம் கொடுமை செய்திருக்கிறார்கள், அதற்கு பதிலாக அவற்றை ஒரு நிமிடத்தில் வெட்டி இறைச்சி ஆக்குவது அவற்றிற்கு செய்யும் கொடுமைகளில் மிகவும் குறைவானது தான். முன்னோர்களெல்லாம் தவறு செய்யாதவர்கள் அவர்கள் விலங்குகளிடம் எவ்வளவு அன்பு செலுத்தி இருக்கிறார்கள் பாருங்கள், இன்றைக்கு புளுகிராஸ் அமைப்புகள் பெருகியதால் பட்டிகள் மறைந்துவிட்டன, ஆனாலும் அடிமாட்டு விற்பனைகளுக்கு குறைவே இல்லை.

                                 இன்றைய மக்கள் தொகையின் தேவைகளுக்கு ஈடு கொடுக்க பசுவிடம் பால் எந்திரம் வழியாகத்தான் கறக்கப்படுகிறது. எந்திரங்கள் உறிஞ்சும் போது மாடுகளுக்கு ஏற்படும் வலி கூடுதல் ஆனதே.

                                 பசு புனிதம் என்று கூறுவதால் அவற்றை போற்றத் தேவையில்லை, ஆனால் அவற்றின் பலன் பெற்ற நன்றி உடையவர்கள் என்பதால் அதனைப் போற்றுவதில் தவறு இல்லை. பசுவதைகள் மட்டுமல்ல எந்த ஒரு விலங்கையும் வதைப்பது மிகப் பெரிய தவறு அதற்கான உரிமையும் நமக்கு இல்லை. இன்றைக்கு இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வெளிநாடுகளில் மாடுகள் பெருகியதே ஓசோன் படலம் விரிந்ததன் காரணமாகச் சொல்கிறார்கள், மாடுகளின் சாணத்தில் மீத்தேன் இருப்பதால் அவை ஓசோன் மண்டலத்தை ஓட்டைப் போடுகிறது என்கிறார்கள், சாணங்களை உடனடியாக உரமாக மறுபயீனீடு செய்யாமல் அவற்றை தேக்கி வைத்திருப்பதாலும், அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமலும் கொட்டுவதால் அவற்றில் உற்பத்தியாகும் மீத்தேன் அளவும் மிகுதி. மாடுகள் உற்பத்தியை, மாட்டுப் பண்ணைகளை குறைத்துவிட்டால் பனிப் பகுதிகளின் ஆயுளை கூட்டி, கடல் நீரால் உலக அழிவு என்கிற பேரபத்தையும் தள்ளிப் போடலாம்.

                                 மாடுகளை கொன்று திண்பவர்களை விட, செத்தமாடுகளை உண்பவர்கள் தாழ்வானவர்கள் இல்லை, ஏனெனில் மாடுகள் இன்னார் உண்ணுவார்கள் என்பதற்காக இறப்பதில்லை, மாடுகளின் பாலைக் குடிப்பதில் தவறு இல்லை, மாடுகளை பாலுக்காக மட்டுமே வளர்த்து பின் அதனை புறக்கணிப்பது தவறு , அது போல் மாட்டு இறைச்சிகள் உண்பது தவறு இல்லை, ஆனால் தவிர்க்கலாம், போதிய இறைச்சிகாக அதன் உற்பத்தியை கூட்டுவதும் தவறே, அதன் எதிர் பலனை நாம் தான் அனுவிப்போம்.

                                 'பிஸ்மில்லா' என்று சொல்வது கூட மாடுகளைக் கொல்வதன் கட்டுப் பாடுகள் குறித்தது, ஆனால் கறியின் சுவையில் அதனை உரிமையாக்கிக் கொ(ள்)ல் கிறார்கள். விலங்கினங்களை கொல்வது தவறு என்கிற கருத்து இல்லை என்றால் அவற்றை கொல்லும் போது பிஸ்மில்லா சொல்வதும், அவற்றை அப்படி சொல்லப் பட்டதை மட்டுமே 'ஹலால்' என்று சொல்வதும் கூட தேவையற்றது தானே.

கண்ணாடி பயிற்சி


                              அறிவியல் இல்லாது வேதாத்திரியம் இல்லை. இவ்விளக்கங்களிலும் இவ்வுண்மையே வெளிப்படுகின்றது.

                              எந்த ஒரு பொருளிலே நாம் காந்தத்தைக் குவிக்க வேண்டியிருப்பினும், அப்பொருள் அங்கே எந்திரம் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டு விடுகின்றது.
எந்திரம் என்பதைக் உன்னித்துக் காணும் போது நிகழும் காந்தச் சேகரிப்பு மிகுதியால், மனம் நடு மன நிலைக்கு [உயிர் மீது நிலைத்தல்] தானாகவே நகரவல்லது. நடு மனத்துக்கு நகர்த்த வல்ல, காந்தச் சேகரிப்புக்கு உறுதுணையாய் அமைய வல்ல ஒரு ஊடகத்தை கவனமாக பராமரித்தல் அவசியம்.

                              நமது முறையிலே கண்ணாடித்தவம் என்பது இராமலிங்கர், நமது மஹானுக்கு சூக்குமமாக உணர்த்திய தந்திரங்களில் ஒன்றாகும். இராமலிங்கர் தான் சிறுவனாக இருந்த போது படிப்பிலே கவனம் செலுத்தாமையால், தம் மூத்த அண்ணணுடன் பிணக்குற்று, வீட்டின் ஒரு அறையில் மட்டுமே தங்கி, அண்ணன் வரும் போது அவர் எதிரே வராத வண்ணம் இருந்து வந்தார். அந்த அறையிலே தனியாய் அமர்ந்து அண்ணனிடம் தன்னை நிரூபித்துக் கொள்வதற்காக பாடங்களில் கவனத்தை ஊன்றிக்கொண்டிருந்தார் என்று அவரது குடும்பமே நம்பிக்கொண்டிருந்த போது, அவரோ, அங்கு ஒரு கண்ணாடியை நிறுவி, அதற்கு சாம்பிராணி யிட்டு, அதை பலமணி நேரம் உன்னிப்பாகப் பார்த்துகொண்டிருந்தார். அவ்வாறு பார்த்துக் கொண்டே முருகக்கடவுளை நோக்கி பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில், அவரது மனமே முருகனாய் நின்று பின் அவரதுமனவுருவமே அக்கண்ணாடியில் அவருக்கு பிரசன்னமானது. மேலும் இவ்வாறு பல மணி நேரம் கண்ணாடிப் பயிற்சியில் ஈடுபட்டதும், அவரது சீவகாந்தம் காலத்தால் திணிவில் மிகுந்து, ஒளி எனும் காந்தத் தன்மாத்திரையாக மாற்றமடைந்து, 'ஒளியுடலார்' எனும் பெயரை அவர் பெறக்காரணமாயிற்று.

                              1. காந்தகச் சேகரிப்பு எந்திரத்தின் உதவியால் மிகுந்து சீவகாந்தப் பெருக்கம் ஏற்படும். பெருக்க மிகுதியால் காந்தம் தன்னுடைய தன்மாத்திரையில் உயர்ந்து ஒளியாகக் கூடத் தோற்றமளிக்கலாம், அதுவும் சாத்தியமே நமக்கு.

                              2. காந்தச் சேகரிப்பு, உயிர் உணர்தலை, உயிர் அறிதலாக, உயிர்கலத்தலாக மாற்ற வல்லது. இந்த நிலையிலே மனம் 14-40 அலை நிலையிலிருந்து 7-14 அலை நிலைக்குள் தானாகவே வழுக்கி உட்புகுந்து விடும். இந்த நிலையில் மனம் எதை நினைக்கின்றதோ அதுவாகவே மாற்றமடையும், நாம் கண்ணாடியில் நமது பிம்பத்தை நம் மனம் முழுக்க நிறைந்த மகானது வடிவமாகவே காணலாம், இதுவும் நிகழும்.

                              1. எந்திரத்தின் பயன்: ஒரு பொருள் இருக்கின்றதென்றால், அதைப் பார்க்கும் போது அதன் பயன்பாடுதான் நம் மனதில் ஓடவேண்டும். ஒரு ஆடை இருக்கின்றது, அதைக் காணும் போது அதன் பயன் உடலை காப்பதே எனும் எண்ணம் தான் எழவேண்டுமேயன்றி, என்ன அழகாக பளபளப்பாக இருக்கின்றது இந்தச் சேலை, எனும் எண்ணம் நம் மனதில் ஓடினால் அது சரியா? அது போலத்தான், கண்ணாடித்தவத்துக்கு வைக்கும் கண்ணாடியைப் பார்க்கும் போது அதன் பயன்பாடு மட்டுமே நம் மனதில் எழவேண்டும். அதற்கு கலர் கலராக ஃபிரேம் செய்து வைத்தால், அதைப் பார்க்கும் போது அந்தக் கலர்தான் மனதில் ஓடுமேயன்றி கண்ணாடியின் பயன் பற்றிய எண்ண அலை நம் மனதில் எழுமா? முதல் தேவை எளிமை மற்றும் பயன்பாடு குறித்த சிந்தனையாலமைந்த அமைந்த தேர்வு.

                              2. சூக்கும சரீரத்தின் அளவு: உங்களது துவாதசாங்கம் என்பது ஒரு ஒன்றரை அடி அளவுக்கு துரியத்திலிருந்து உயர்ந்து நிற்க வல்லது, துவாத சாங்கத்தில் தங்கும் காந்தமும் கண்ணாடியில் பட்டுப் பிரதிபலிக்க வேண்டுமல்லவா, அதனாலே வாங்கிய கண்ணாடி உடலையும், உடலினின்று ஒரு ஒன்றரை அடியளவையும் காட்டவல்லதாய் இருப்பதே நலம். இல்லாவிடில் காந்த மிகுந்த நிலையில் கண்ணாடியின் பயன் கேள்விக்குறியாகிவிட வல்லது.

                              3. எந்திரத் தூய்மை: உடற் தூய்மை, உள்ளத்துக்கு புத்துணர்வை அளிக்கவல்லது. எந்த ஒரு எந்திரத்தின் தூய்மையும் அதை பயன்படுத்துவோருக்கு பயிற்சியில் ஆழ ஊக்குவிப்பாய் அமைய வல்லது. ஆகவே, கண்ணாடியை தூய்மையாய் வைத்திருத்தல் அவசியம்.

                              4. எந்திரக்குக் காப்பு: காந்தம் குவிக்கும் பொருள் எதுவாயினும், அதை அவசியப்படாதோர் எண்ண அலைகளிலிருந்து புறமாக வைப்பதே நல்லது. அந்த விதத்தில் இந்தக்கண்ணாடியை நடு வீட்டில் ஃபிரேம் செய்து மாட்டலாகாது. அதை எடுக்கும் போதும் அருட்காப்பு அவசியம்  வைக்கும் போதும் அருட்காப்பிடுதல் நலம்.

                              5. எந்திரத்தில் குவிப்பு: காந்தம் கையில் மிகுதியாக சேகரிப்படைந்த நிலையில், அது தானாய் வெளியேறி ஓடாத வண்ணம், மஹான் கையுறை அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தது போன்று, காந்தம் மிகுதியாக உங்கள் கண்ணாடியில் சேகரிப்படைந்த நிலையில், அதற்கு உறையிடுதலே நலம். அது குவிந்த காந்தத்தை இழப்பின்றி தேக்கி வைக்க வல்லது.

                              6. குறித்த காலம்: நமது காந்தக் களம் எல்லா நேரங்களிலும் தூய்மையாக அமைய வல்லது. எனினும் கண்ணாடி எனும் எந்திரம் நமது காந்தக் களத்தை மட்டுமே பிரதிபலிப்பதில்லை. அது நம்மைச் சுற்றியுள்ள வான் காந்தக் களத்தையும் [புவியை ஒட்டிய பகுதி] பிரதிபலிப்ப தால், அந்தக் களம் எந்த நேரத்தில் தூய்மையாக இருக்கின்றதோ, அந்த நேரத்திலேதான் கண்ணாடியை இட்ட உறையினின்று வெளியே எடுத்து நம் பயிற்சியைத் துவக்க வேண்டும். அதாவது கண்ணாடிப் பயிற்சி எனும் தந்திரம், பிரும்ம முகூர்த்தில் மட்டுமே செய்யப் பட வேண்டியது. மற்ற நேரங்களில் அந்த எந்திரத்தை எதையும் பிரதிபலிக்கா வண்ணம் சுவரை நோக்கியதாய் உறையிட்டு வைத்தலே நலம்.

கடைசியாக,
                              7. கண்ணாடி வாங்கியது எதற்கு? புதுசா நிறைய காசுகுடுத்து செருப்பு வாங்கிருக்கேன் சார், அதனால தான் சார், நான் அதை காலிலே அணியாது கையிலே வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றேன் என்பது போன்று சில பேர், கண்ணாடி தவம் செய்ய கண்ணாடி வாங்கிருக்கேன் சார், பரணிலேயே வைத்துப் பூட்டியிருக்கின்றேன், எதோ அது பெரிய எந்திரமாம், பத்திரமாய் வைக்கணுமாம், என்ற நினைப்பிலே அதைப் பயன்படுத்தாமலேயே வைத்திருப்பது, விலையுயர்ந்த செருப்பு வாங்கி தலைல வச்சிகிட்டு நடந்த கதைதான்.


எச்சரிக்கை
கண்ணாடி பயிற்சி அதிக ஈர்ப்பு கொண்டது. இதில் பால் கவர்ச்சியும் அடக்கம் எனவே பழக்க வழக்கங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.இது ஜகவசியத்தின் பலனும் கூட.இயற்கையாகவே நம் கண்ணாடியின் முன் நம்மை அழங்கரித்து கொள்வதும் கண்ணாடிப்பயிற்சியின் பலன் தரும்.எனவே அருட்கப்பியில்லாமல் தொடங்கவே முடிக்கவே கூடாது.

Friday 12 April 2013

பிராணாயம்

சுவாமி விவேகானந்தர் கூறிய பிராணாயாமம்(மூச்சை அடக்கி ஆளுதல்)

மனிதனின் உடலும் மனமும் ஆரோக்கியமானதாக வைத்திருக்க நமது முன்னோர்கள் பல தியான வழிகளை நமக்கு அருளி சென்றனர்.அவற்றில் மிக முக்கியமான ஓன்று தான் இந்த பிராணாயாமம்.
பிராணாயாமம் என்றால் என்ன?

பிராணாயாமம் என்பது  நாம் சுவாசிக்கும் மூச்சை அடக்கி ஆளுதல் என்று பொருள். மனிதன் சுவாசிக்கும் மூச்சானது,முதலில் சுவாசப்பையினை இயக்க செய்கிறது. சுவாசப்பை இதயத்தை இயக்குகிறது. இதயமானது நமது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக இயங்கசெய்கிறது.இந்த சீரான ரத்த ஓட்டமானது மூளைக்குச் சென்று அதனை சீராக இயங்க செய்வதன் மூலம், நமது மனதானது மூளையின் கட்டளையின் மூலம் உடல் சீர்கெடாமல் பாதுகாப்பாக வைத்திருக்கின்றது. இதுவே பிராணாயாமம்  என்பதின் சுருக்கமாகும்.

பிராணாயாமம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்கள் நமக்கு அளித்துள்ள செய்முறையினை முறையாகச் செய்வதின் மூலம் அதன் முழுபலனையும் நாம் அடைய முடியும்.


சுவாமி விவேகானந்தர்

பிராணாயாமத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன அவை வருமாறு;

01.பூரகம் - மூச்சை உள்ளே இழுத்தல்

02.கும்பகம் - மூச்சை உள்ளே அடக்குதல்

03.ரேசகம் - மூச்சை வெளியே விடுதல்

சுவாசித்தல் என்ற இந்த தேவையான செயல் காலஅளவு மீறாத ஒழுங்கோடு செய்யப்படவேண்டும்.அதற்கு ஒரே வழி எண்ணிக்கை தான் .ஆனால் அந்த எண்ணிக்கை என்ற ஓன்று ஆழ்மனதை தொடுவதாக இல்லை.எனவே தான் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை  உச்சரித்து பிராணாயம் செய்வது சிறப்பானது.

பிராணாயம் செய்யும் வழிமுறை

பெருவிரலால் வலது நாசியை அடைத்துக்கொண்டு, 'ஓம்' என்ற மந்திரத்தை மனதார நான்குமுறை உச்சரித்த படியே இடது நாசி வழியாக மூச்சை நன்றாக உள்ளே இழுங்கள்.

அதன் பின்பு ஆட்காட்டி விரலை இடது நாசி மீது வைத்து, இரு நாசிகளையும் அடைத்து,'ஓம்' என எட்டுமுறை மனதால் உச்சரித்தபடி மூச்சை உள்ளே இழுத்து நிறுத்தி வையுங்கள்.    

பின்னர்,பெருவிரலை வலது நாசியிலிருந்து எடுத்து,'ஓம்' என நான்கு முறை உச்சரித்தபடி மெதுவாக மூச்சை வெளிப்படுத்துங்கள். உள்ளே இழுத்த மூச்சு அனைத்தையும் வெளியிடவேண்டும் என்பதால் மூச்சை வெளியே விடும்போது அடிவயிற்றை உள்ளிழுத்தபடி எல்லா மூச்சையும் வெளியேற்ற வேண்டும்.

மூச்சை உள்ளே இழுத்தல் ,உள்ளே அடக்குதல், வெளியே விடுதல் ஆகிய மூன்று செயல்களையும் செய்து முடித்தல் பிராணாயாமப் பயிற்சியினை ஒருமுறை நாம் செய்து முடித்துள்ளோம் என பொருள் .

பெருவிரலால் வலது நாசியை அடைத்து ஒருமுறை இந்த பயிற்சியை முழுமையாக செய்த பின்பு ஆட்காட்டி விரலால் இடது நாசியை அடைத்து மறுமுறை இந்த பயிற்சியை முழுமையாக செய்யவேண்டும்.இதுபோன்ற பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும்.

முதல் வாரத்தில் இப்பயிற்சியினை எட்டு முறை செய்ய வேண்டும்.அடுத்து வரும் வாரங்களில் மூச்சை இழுக்கும் கால அளவை ஆறுமுறை 'ஓம்' என உச்சரித்து அதிகபடுத்தவேண்டும். மூச்சை அடக்கப் பன்னிரெண்டு முறை  'ஓம்' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூச்சை வெளிப்படுத்தவும் ஆறுமுறை 'ஓம்' உச்சரிக்க வேண்டும்.

மேற்கொண்டு இந்த பயிற்சியினை நன்றாக செய்த பின்பு, காலஅளவை முடிந்தமட்டும் அதிகப்படுத்தலாம்.இவ்வாறு செய்வதினால் நமக்கு உடல் நிலையானது சீராக இருக்கவும்,மனஅமைதி ஏற்படவும் இப்பயிற்சி நமக்கு உதவும்.


இது மிகவும் எளிதான பயிற்சியாகும் இதனை முறையாக செய்தாலே இப்பயிற்சியின் முழுப்பயனையும் அடையலாம்.

இப்பயிற்சியின் மூலம் நமக்கு எந்தவிதமான உடல் சீர்கேடும் ஏற்படாத வண்ணம் இது நம்மை பலபடுத்தும்.எனவே இப்பயிற்சியினை சுவாமி விவேகனந்தர் கூறியது போல் சரியான முறையில் செய்து பயன் பெற அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

வேரிகோசிஸ் புண் ஆற

  1. தசைநார்க் கசிவு, சிரைகள் எனும் ரத்தக் குழாய்கள் வெட்டுப்படுதல்,  
  2. புண் ஆழமாக இருத்தல்,  
  3. கிருமிகளால் உண்ணப்படுதல்
  4.  எலும்பு முறிதல்,  
  5. அதிகமான அளவில் நெய் மற்றும் எண்ணெய்ப் பொருட்களைச் சாப்பிடுதல்,  
  6. புண் ஏற்பட்டுள்ள பகுதியில் உரோமம், ஆடை முதலியவை உராய்தல், குலுக்கலுடன் கூடிய பயணம்,  
  7. குடல் பகுதியை மலம் அதிகம் சேரும் அளவில் வளரவிட்டு, சுத்தம் செய்து கொள்ளாமல் மலச்சேர்க்கையை வளர்த்துக் கொள்ளுதல்,  
  8. அதிக அளவில் உணவைச் சாப்பிடுதல், அல்லது 
  9. அதிகப் பட்டினியிலிருந்து உடலை இளைக்கச் செய்யும் முயற்சி,  
  10. பகலில் தூங்குதல்,  
  11. இரவு கண் விழித்தல் 
ஆகியவை காரணமாக, ஆறக்கூடிய புண்ணாக இருந்தாலும், ஆறுவதில்லை என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

உணவும் பத்தியமும்

                            பழைய அரிசியினால் தயாரிக்கப்பட்ட கஞ்சியை காலை உணவாக, இந்துப்புடன் வெதுவெதுப்பாகச் சாப்பிடுவது நலம். அதுபோல, பச்சைப் பயறு கஞ்சியைக் காலை உணவாகச் சாப்பிட்டால் புண் விரைவில் ஆறுவதற்கு உதவியாக இருக்கும். புது அரிசி, உளுந்து, எள்ளு, கடலை, கொள்ளு, வெல்லம், மாவுப் பண்டங்கள், பாயசம், தயிர், பால், புளிப்பு, உப்பு, காரம் போன்றவற்றைக் குறைக்கவும். தலையைக் கிழக்கு நோக்கி வைத்து, இரவில் உறங்கினால், விரைவில் ஆறுவதற்கான ஒருவழியாகும் என்ற ஒரு விநோதக் குறிப்பை ஸூஸ்ருதர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.
                            திரிபலை, கருங்காலிக் கட்டை, அதிமதுரம், வேப்பிலை, மரமஞ்சள், மயில்துத்தம் போன்றவை புண்களை ஆற்றுவதில் சிறந்தவை.
                            திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மற்றும் கருங்காலிக் கட்டையை வகைக்கு 5 கிராம் வீதம் சேர்த்து, அரைலிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி, புண் ஏற்பட்டுள்ள பகுதியை காலை, இரவு உணவுக்கு முன் அலம்பி விடுவதால், அங்குள்ள கிருமித் தொற்று நீங்குவதுடன், புண் விரைவில் ஆறுவதற்கும் ஏற்ற சிகிச்சையாகும். அதன்பிறகு, அதிமதுரத் தூளை அந்த இடத்தில் தெளிப்பதும் நல்லதே.                         
                            இரண்டு திரிபலாகுக்குலு எனும் மாத்திரைகளைக் காலை, இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன்பாகச் சாப்பிடவும்.
                            சுமார் 28-48 நாட்கள் வரை சாப்பிடலாம். மஞ்சிஷ்டாதி ஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து,60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து, காலை,மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் நல்லதே. சுமார் 3 -4 வாரங்கள் வரை சாப்பிடலாம்

  புகை வைத்தியம்

துத்தம், வேப்பிலை, மஞ்சளைப்  புகைத்து புண் ஏற்பட்டுள்ள பகுதியில் இரவில் படுக்கும் முன் புகையைக் காண்பித்துவர, புண் விரைவில் ஆறும்.

Saturday 30 March 2013

பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்


தங்கத்தை விட்டெறிபவன், செம்பை பொறுக்கியெடுக்கும் படி ஆகும் நாள் விரைவில் வரும்.

ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு.

உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான்.

பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.

பொருளுக்கு மனிதன் அடிமை;பொருள் யாருக்கும் அடிமையில்லை.

அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமை யுடையது பணம்தான்.

செல்வச் செருக்குடையவர்கள், தங்களுடைய உடமைகளை மட்டுமல்ல;உள்ளத்தையும் அடமானம் வைக்கத் தயங்கமாட்டார்கள்.

உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற!
அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது.

செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும்.

அனுபவிக்கிற வசதியில் சிறிது குறைந்தாலும், சிலர் தாங்கள் ஆண்டியாகிவிட்டதாகவே நினைக்கிறார்கள்.

ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான்.

தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு.

இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (ஆளுமைத்திறனுடன்) வளர்ப்பதில்லை.அவர்கள் வளர பணம் மட்டுமே கொடுத்து உதவுகிறார்கள்.பணத்தின் குணம்,அதன் மதிப்பு,அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை சொல்லித்தருவதே இல்லை.அதனால்தான்,பொறுப்புள்ள குடும்பங்கள் இன்று உருவாகுவது இல்லை.(இந்த பழமொழிக்கு மார்வாடிகள்,சேட்டுகள் விதிவிலக்கு)

லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே !

ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம்.

முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம்.

நன்றி : தினமணி

பழங்களும் பயன்களும்



1. மலச்சிக்கலைப் போக்கும் *நறுவிலிப் பழம்*

நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர
மலச்சிக்கல் அற்றுப் போகும்.

2. தாகம் தணிக்கும் *ஆல்பகோடாப் பழம்*

காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும்.
அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம்
தணியும். காய்ச்சல் விலகும்.

3. இளமை தரும் *தக்காளி*

இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி,
மலச்சிக்கலையும் போக்கும்.

4. பேதியை நிறுத்தும் *எலுமிச்சம்பழம்*

எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2
நாளில் பேதி நின்றுவிடும்,

5. இன்பம் தரும் *இனிப்புக் கமலா*

இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்
தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

6. விக்கலை நிறுத்தும் *கொய்யாப் பழம்*

கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

7. தலைக் கனம் குறைக்கும் *களாப் பழம்*

களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து
தலைக்கனம் குறையும்.

8. கருப்பைக்கு வலிமை தரும் *மாதுளை*

மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும்.
வயிற்றுக் கோளாறு வராது.

9. வாய்வுக்கும் *நாரத்தம் பழம்*

நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம்
விலகும்.

10. கண்ணொளி தரும் *முந்திரிப் பழம்*

கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

11. வெண்மேகம் தீர்க்கும் *கண்டங் கத்திரிப்பழம்*

கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு
வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் ஆஇறக்கி ஆறவைத்து
வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

12. காச நோய்க்குத் *தூதுளம் பழம்*

தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம்
விலகும்.

13. கபால நரம்புகள் பலம் பெறப் *பலாப்பழம்*

பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை
பெறும்.

அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

14. பசியைத் 'துண்டும் *இலந்தைப் பழம்*

பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும்.
அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

15. தாது விருத்தி தரும் *திராட்சை*

உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன்

சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

16. *பப்பாளிப் பழம்*

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம்
சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

17. *வாழைப்பழம்*

மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை
மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

18. *வில்வப் பழம்*

பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீ ரகம்
நன்கு செயல்படும்.

19. *அரசம் பழம்*

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

20. *சீமை அத்திப்பழம்*

மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும்.

இரத்தச் சோகை விலகும்.

21. *பேரீச்சம் பழம்*

இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள்.

22. *தர்பூசணிப் பழம்*

கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

23. *முலாம் பழம்*

மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

24. *விளாம்பழம்*

பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள்

விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட,
பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

25. *அன்னாசிப் பழம்*

குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச்
சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு
வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

குண்டலினி ரகசியம்


குண்டலினி
அது என்ன?,  
எங்கே இருக்கிறது?, 
எப்படி இருக்கிறது?
 என்னவெல்லாம் செய்யக் கூடியது
 இந்த குண்டலினியை எழுப்புவது,  
அதன் செயல்பாடுகள்,  
விளைவுகள்,  
அனுபவங்கள் குறித்து பார்க்க வேண்டி இருக்கிறது.

குண்டலினிக்கு முன்பு நாடிகளைப் பற்றிய சிறிய அறிமுகம் அவசியமாகிறது..நமது உடலில் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகள் உள்ளது 

நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல், நோக்குதல் போன்றவை நேரடி
அர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளை நாடுவதால் கூட இவைகளுக்கு நாடி என பெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்வதானால் நவீன அறிவியல் சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்த நாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம். ஆனால் நரம்புகளைப் போல இவற்றை நேரடியாக பார்க்க முடியாது என்றும் இவை சூட்சுமமானது (புலன்களிற்கு அப்பாற்பட்டது) என்கின்றனர்.

மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர்.இன்னும் விரிவாக சொல்ல
வேண்டுமெனில்,
  • தலையில்                          7000ம் நாடிகளும்,
  • வலது கண்ணில்                2000ம் நாடிகளும், இடது 
  • கண்ணில்                         2000ம் நாடிகளும்,
  •  மூக்கில்                           3330 நாடிகளும்,
  •  வலது காதில்                   1500 நாடிகளும்,
  •  இடது காதில்                   1500 நாடிகளும்,
  •  பின்கழுத்தில்                   1000ம் நாடிகளும்,
  •  பின்னங் கழுத்தின் கீழே    8000ம் நாடிகளும்,
  •  முதுகில்                          3680 நாடிகளும்,
  •  கண்டத்தில்                      1000ம் நாடிகளும்,
  •  நாபியில்                         8990 நாடிகளும்,
  •  வலது கையில்                 1500 நாடிகளும்,
  •  இடது கையில்                 1500 நாடிகளும்,
  •  விலாப் பகுதியில்            3000ம் நாடிகளும்,
  •  கால்களின் இடுக்கில்        8000ம் நாடிகளும்,
  •  பிஜத்தின் கீழே                2000ம் நாடிகளும்,
  •  பிஜத்தின் மேல்                   2000ம் நாடிகளும்,
  •  கோசத்தில்                     13000ம் நாடிகளும்,
  •  பாதத்தில்                       1000ம் நாடிகள் என 
ஆக மொத்தம்                       72000ம் நாடிகள் இருக்கின்றதாம்.

இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள் முக்கியமானவைகளாகச்
சொல்கின்றனர்.அவை பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.

  • பிங்கலை     என்பது வலது நாசியிலும்,  
  • இடங்கலை   என்பது இடது நாசியிலும்,
  • சுழுமுனை    என்பது இவை இரண்டிற்கு நடுவிலும்
  • சிகுவை       என்பது உள்நாக்கிலும்,
  • காந்தாரி      என்பது இடது கண்ணிலும்,  
  • புருடன்       என்பது வலது கண்ணிலும்
  • அத்தி               என்பது வலது காதிலும்,  
  • அலம்புடை  என்பது இடது காதிலும்,  
  • சங்கினி           என்பது பிறப்பு உறுப்பிலும்,  
  • குரு            என்பது ஆசனவாயிலிலும் ஓடுகிறது.

                    இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்த எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமது உயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். 
இந்த நாடிகள் ஏழு மையங்களில் இணைந்து பிரிந்து செல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதார மையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதார மையங்கள்தான் நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இவை மூலாதாரத்திற்கும், உச்சந்தலைக்கும் இடையே உடலின் ஊடாகஅமைந் திருக்கின்றன.

இது பற்றி காகபுசுண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

உச்சிதலை நெற்றிவிழி புருவமத்தி
 உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
 பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
 பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய …………

நெற்றிவிழி புருவமத்தி
 உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
 பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
 பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய
 கச்சிலை சொன்னாரோ முத்தர் சித்தர்
 கால்வாசி கால்யோகம் காணாப்பித்தர்
 கொச்சிநரை சொல்லவில்லை வெளுத்தமார்க்கம்
 குண்டலியைக் கண்டாக்காற் கருக்கும்பாரே. _ காகபுசுண்டர்

1.மூலாதாரம்
 2.சுவாதிஷ்டானம்
 3.மணிபூரகம்
 4.அநாகதம்
 5.விசுத்தம்
 6.ஆக்ஞேயம்
 7.துரியம்
 என்பதே இந்த ஆதார மையங்கள். இவை மனித உடலில் முறையே
 1.மூலம்
 2.தொப்பூழ்
 3.மேல்வயிறு
 4.நெஞ்சம்
 5.மிடறு
 6. புருவநடு
 7. உச்சந்தலை என ஏழு இடங்களில் அமைந்திருக்கிறது.

                    இதுவரை நாடிகள் மற்றும் அவை குவிந்திருக்கும் ஆதார மையங்கள் நமது
 குண்டலினியானது இந்த ஆதார மையங்களின் ஊடாகவே பயணிக்க வேண்டியிருப்பதால்
 நாடிகளைப் பற்றிய ஆரம்பத் தெளிவு வேண்டி குண்டலினி என்பது மாயமோ,
 மந்திரமோ இல்லை. அது ஒரு வகையான உள்நிலை உளவியல் தொழில்நுட்பம். இதை
 புரிந்து கொள்ள முயற்சிப்பதில்தான் இதன் செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல்
 சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலை
 மாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம். உயர்த்துதல் என்பதை விட பரவுதல்
 என்கிற வார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.

                    குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகளை நமது முன்னோர்கள்
 சொல்லியிருக்கின்றனர். அது பற்றி பின்னர் பார்ப்போம். இத்தகைய பயிற்சியை
 மேற் கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே
 கூறியிருக்கின்றனர்.

                    குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன் முதலில் மெய்யான குருவினை
 கண்டறிய வேண்டும். இதற்கு அவன் ஆசைகளை குறைத்தவனாக இருப்பது மிகவும்
 அவசியமாம். தீவிர வைராக்கியமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சுத்தமான
 மனமுள்ளவனும், மனத்தின் ஆவேசமான ஆசைகளைத் துறந்தவனை மெய்யான குரு தானாகவே அண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரே முன்னின்று அரவனைத்து வழி
 நடத்துவார். இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் பயிலும் சாதகனே குண்டலியை
 எழுப்புவதால் உண்டாகும் முழுப் பலனையும் அடைவான் என்கின்றனர்.

நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஒருவன் ஆசனம், பிராணாயாமம், மத்ரை இவற்றின்
 பலத்தால் மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன் இடறி விழுந்து தன்னையே
 கெடுத்துக் கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏற அவன் சக்தியற்றுப்
 போவானாம். இதுவே, சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள் (குறைவுகள்)
 ஏற்படவும், வழி பிசகவும் காரணமாய் அமையும் என்கின்றனர்.

யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க
 வேண்டும். பயிற்சியின் பூரண அறிவு இரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்க
 ஆசிரியன் அவசியம். கடைசியாக நிதானமானதும் குண்டலினி எழுப்பப்படும்போது
 சாதகனுக்கு வழியில் பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை) உண்டாகும். ஆதலால்
 சாதகன் ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்த ஆவலைத் தகர்க்கத்தக்க
 சக்தியற்றவனாகி விடுவான்.

குண்டலினி பயிற்சியைப் போலவே அந்த சம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்க
 வேண்டியது மிக அவசியம். குண்டலினி பற்றிய விபரங்களோ விளக்கங்களோ
 முழுமையாக தெரியாதவர்கள் இதில் வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டே
 இத்தனை நீளமாக குண்டலினி பற்றிய அறிமுகத்தினை பகிர நேர்ந்தது.

சித்தரியலில் குண்டலினி பற்றி பேசாத சித்தர்கள் வெகு குறைவு. அநேகமாய்
 எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த குண்டலினியின் மகிமையை
 கூறியிருக்கின்றனர். இதனை உயர்த்துவதன் மூலம் சாதாரண உணர்வினை, பரபிரம்ம
 உணர்வாக உயர்த்திடலாம் என்று கூறுகின்றனர்.

சுருள்சுருளாய் நெளிந்த ஒரு காதணியை குண்டலம் என வழங்குகிறோம். இப்படி
 சுருண்டு வளைந்து பாம்பினைப் போல இந்த நிலை சக்தி மூலாதாரத்தில்
 இருப்பதால் இதனை குண்டலினி என அழைப்பதாக ஒரு பெயர் காரணம் கூறுகிறது. இதை
 ஒரு யோக வித்தையின் மூலம் எழுப்பிடலாமாம். இதன் ஆற்றலை ஒருனியை பாம்பினை
 ஒத்ததாக கூறுகின்றனர்.

குண்டலினியின் இருப்பிடத்தை காகபுசண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

குண்டலியைக் கண்டாக்காற் கருக்குமென்பார்
 குண்டலியி னிருப்பிடமும் மூலமென்றார்
 குண்டலிதா னென்றாக்கால் நரம்போதோலோ
 குருந்தண்டோமுள்ளெலும்போ பிடரிமார்போ
 குண்டலியே யென்றவர்கள் பெயரார் சொன்னார்
 கொத்தளத்தின் பெருமைதனைச் சொல்லினார்கள்
 குண்டலியே வாய்திறக்கப் பேசுமென்றார்
 குருவென்றார் வாலையென்றார் குமரனென்றாரே.
_ காகபுசுண்டர்
குண்டலினியை சித்தர் பெருமக்கள் வெவ்வேறு பெயர்களில்
 அழைத்திருக்கின்றனர். அதைச் சொல்லும் கொங்கணவர் பாடல் ஒன்றை பார்ப்போம்.

சிறந்திட்ட குண்டலியின் பேர் செப்பக் கேளு
 சிறப்பான சிவயோக மென்றுபேரு
 சிறப்பான வாசி யென்று மிதுக்கே பேரு

பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது நம்முடைய இந்த உடல்
 • உடலின் உள்ளேயும் வெளியேயும் நின்று இயங்கும் ஆற்றலையே நாம் உயிர் என்கிறோம்.
 • உயிரின் படர் நிலைதான் மனம்.
 • மனத்திற்கு ஞானம்”, “உறுதிஎன இரண்டு முகங்கள் உள்ளது. இவை தனித்துவமானவை.
 • உணர்தல், உணர்த்துதல் என்கிற இரண்டு வேலைகளை மட்டுமே மனம் செய்திறது.
 • நம்முடைய உணர்தல் மற்றும் உணர்த்தும் நிலைமை மேம்பட விழிப்புணர்வு
 தேவைப் படுகிறது.
 • குண்டலினியை தூண்டுவதன் மூலம் இந்த விழிப்புணர்வினை உயர் தனித்துவ
 நிலைக்கு கொண்டு செல்லலாம்.
 இதுதான் கடந்த வாரத்தின் நெடுகே நாம் பார்த்தவைகளின் சாராம்சம். இவை
 எதுவும் புதிய விஷயங்கள் இல்லை. நம்மில் பலரும் ஏற்கனவே அறிந்த
 ஒன்றுதான். இருப்பினும் அடிப்படை கூறுகளின் மீதான புரிதலை உருவாக்கிட
 முந்தைய இந்த பதிவுகள் உதவி இருக்கும் என நம்புகிறேன்.
Author: Arulnithi Srinivasan B, Kundalini Yogi, Dedicated Disciple of Vethathiri Maharishi
srinivasanb2401@gmail.com